சென்னை ஐகோர்ட்டில் எம். ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ வருமான வரித்துறை சோதனையின்போது கண்டறியப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தவெக தலைவர் விஜய் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. மேலும், முறைகேடான பணப்பரிமாற்றம் மற்றும் வருமானத்தை மறைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும், அமலாக்கத்துறை மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் துறை, இது விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி அதை எண்ணிட மறுத்திருந்தது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவின் ஏற்புடைமை குறித்து முடிவெடுப்பது நீதிமன்றத்தின் நீதித்துறை சார்ந்த செயல்பாடு என்றும், அதனைப் பதிவகத் துறை தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
மேலும், மனுவின் தகுதி குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை "ஏற்புடைமைக்கு உட்பட்டது என்ற முத்திரையுடன் பதிவு செய்து, தொடர்புடைய நீதிபதி முன்பு பட்டியலிட வேண்டும் என்றும் பதிவகத் துறைக்கு உத்தரவிட்டனர்.