தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் அருகே விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 43). தொழிலாளி. இவரது வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் சந்தனகுமார் மகன் விஷ்வாவிற்கும் மீள விட்டான் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்த முகிலன் மற்றும் 2 சிறுவர்களுக்கும் இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக சந்தனகுமார் வீட்டின் மீது 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 இளஞ்சிறார்கள் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.