கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

குழாய் இணைப்பு பணி: தண்டையார்பேட்டை மண்டலத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

8, 9 ஆகிய தேதிகளில் பட்டேல் நகர் நீரேற்று நிலையம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட கத்திவாக்கம் நெடுஞ்சாலையும், ஜே.ஜே.நகர் ஏ1 தெருவும் சந்திக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி வரும் 8-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி முதல் 9-ந்தேதி இரவு 8 மணி வரை பட்டேல் நகர் நீரேற்று நிலையம் தற்காலிகமாக செயல்படாது.

எனவே, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள எழில்நகர், எம்.ஜி.ஆர். நகர், பாரதி நகர், காமராஜர் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.

பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் தொட்டிகள், தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் தடையின்றி வழக்கம் போல் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.