சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
சமூகத் தொண்டர் எனும் போர்வையில் சமுதாயத்தில் நச்சு விதைகளைத் தூவி வரும் பியூஸ் மானுஷ், பிராமண குலத்தினரைத் தாழ்வுபடுத்தியும், அவர்தம் விழுமிய கலாசார அடையாளங்களை அவமதித்தும் பேசியுள்ள காணொளி கடும் கண்டனத்திற்குரியது. திருக்கோயில்களின் மாண்பையும், வழிபாட்டு நெறிமுறைகளையும் அவதூறுகளால் சிதைக்க முயல்வதோடு, சாதிப் பூசல்களைத் தூண்டும் நோக்கில் நச்சு மொழிகளை உதிர்த்திருப்பது அநாகரிகத்தின் உச்சமாகும்.
ஆகவே, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழித்துரைத்து, மக்கள் நெஞ்சங்களில் பிரிவினைத் தீயை மூட்ட முயன்ற பியூஸ் மானுஷ் மீது தமிழக அரசும் காவல்துறையும் காலந்தாழ்த்தாது வன்மையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வருங்காலத்தில் எவரும் எந்தவொரு சமுதாயத்தின் மீதும், அவர்தம் நம்பிக்கைகளின் மீதும் அவதூறுச் சேற்றை வாரி வீச நினைக்கக்கூட அஞ்சும் அளவிற்கு முன்னுதாரணமான தகுந்த தண்டனையை வழங்க வேண்டுமெனத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.