வரிச்சுமைகள் அதிகரிப்பு
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அது குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன. ஒருபுறம் கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்து வரும் நிலையில், மறுபுறம் வரிச்சுமைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றின் பாதிப்புகளில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை மீட்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கங்களால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தான் அவர்களுக்கு கை கொடுத்தது. ஆனாலும் கூட ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக கடந்த ஆண்டில் 51.52 நாட்களும், நடப்பாண்டில் இதுவரை 43.20 நாட்களும் மட்டுமே வேலை வழங்க முடிந்திருக்கிறது. ஊரக மக்களின் வாழ்வா தார தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது போதுமானதல்ல.
வருமானவரி விலக்கு
மக்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிகபட்சமாக வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்துவதுடன், அதற்கேற்ற வகையில் அந்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக இந்த திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கும் நீட்டித்து மத்திய அரசு ஆணையிடவேண்டும்.
வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாகவும், நிரந்தர கழிவை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தவேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல் ஆகியவற்றுடன் பெட்ரோல்-டீசல் மீதான வரிகளை குறைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்க கட்டணத்தை குறைத்தல் ஆகியவை குறித்த அறிவிப்புகளையும் பட்ஜெட்டில் மத்திய அரசு வெளியிடவேண்டும். மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.