வேதாரண்யம்:
வேதாரண்யம் கடற்கரையோர ஊராட்சிகளில் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. அதன்படி முதல் கட்டமாக வேதாரண்யம் வட்டாரத்திற்குட்பட்ட புஷ்பவனம், பெரிய குத்தகை, கோடியக்காடு, கோடியக்கரை உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் 8 ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன. இதில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன் உள்பட பலர் கலந்துகொண்டு பனை விதைகளை நட்டனர். அதேபோல் வாய்மேடு ஊராட்சியில் 12 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வாய்மேடு மேற்கு பகுதியில் வளவனாறு கீழ்க்கரையில் பனை விதைகள் நடும் பணி நடந்தது. இந்த பணிகளை வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மலர்மீனாட்சி சுந்தரம், துணைத்தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலர் அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.