சென்னை,
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வருகிற 19-ந்தேதி (நாளை மறுதினம்) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியாக(எஸ்.எம்.எஸ்.) மதிப்பெண் அனுப்பப்படும். வருகிற 20-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், வருகிற 24-ந்தேதி காலை 9 மணி முதல் 26-ந்தேதி வரை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்கு சென்று பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.