திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ்-2 மாணவனை கட்டையால் தாக்கிய வழக்கில், சக பள்ளி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் பட்டியல் இன மாணவர் ஒருவர் நேற்று (திங்கட்கிழமை) பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சக மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த மாணவர் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து, பாதிக்கப்பட்ட மாணவரின் தலையின் பின்புறத்தில் பலமாகத் தாக்கினார். மேலும், சாதிப் பெயரைச் சொல்லி வசைபாடிவிட்டு அந்த மாணவர் பள்ளி வளாகத்தில் இருந்து தப்பியோடினார்.
தலையில் பலத்த காயமடைந்த மாணவரை மீட்ட பள்ளி ஆசிரியர்கள், உடனடியாக சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மூலைக்கரைப்பட்டி போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், இன்று தலைமறைவாக இருந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவரை நெல்லை சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நடந்த இந்தச் சாதியத் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.