கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிளஸ் 2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா, பொன்னை அடுத்த எஸ்.என்.பாளையம் போயர் காலனியை சேர்ந்தவர் ஜெய்சங்கர். விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகள் சந்தியா (17 வயது). சமீபத்தில் வெளியான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 600-க்கு 430 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

சந்தியா மேல் படிப்பிற்காக தான் விரும்பிய கல்லூரியில் பெற்றோர்கள் சேர்க்காமல் மற்றொரு கல்லூரியில் சேர்க்க இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் பொன்னை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.