கோவை,
கோவை கணபதி தங்கம்மாள் நகர் 2வது வீதியைச் சேர்ந்தவர் ராம்குமார். இவரது மகள் யாழினி (17). இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தார்.
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், யாழினி 454 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால், கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது தாய் நர்மதாவிடமும் வருத்தம் தெரிவித்திருந்தார். குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 8-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மனவேதனையில் இருந்த யாழினி, தனது அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், யாழினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.