கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வெப்படை செட்டியார் கடை பகுதியை சேர்ந்தவர் அல்லிமுத்து. இவரது மகன் சஞ்சய் ரித்தின் (16 வயது). இவர் சவுதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மாணவர் சரியாக படிக்க முடியவில்லை என மனவேதனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவரின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். சஞ்சய் ரித்தின் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வெளியே சென்ற பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வெப்படை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.