சென்னை,
திருக்குறளின் சிறப்பை உலக அரங்கில் எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
பாரதப் பிரதமர் மோடிஜி அவர்கள் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் சிறப்பையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் தருணம்.
“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இன்றும் ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது” என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமையையும், திருவள்ளுவரின் பேரறிவையும் உலகெங்கும் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியாகும். திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை பிரதமரின் இந்த வார்த்தைகள் மீண்டும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.