சென்னை,
மத்திய அரசின் திட்டம் மூலம் தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகள் எவ்விதப் பிணையமும் இன்றி எளிய முறையில் கடனுதவி பெற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடியால் “ஸ்வநிதி" (PM SVANidhi) திட்டம் கொண்டு வரப்பட்டது. கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் நலிவடைந்த சிறு வியாபாரிகளுக்குப் பொருளாதார ரீதியாகப் பேருதவியாக அமைந்த இத்திட்டம், இன்று லட்சக்கணக்கான மக்களின் சுயதொழில் கனவை நனவாக்கி, அவர்களைத் தற்சார்புடையவர்களாக மாற்றி வெற்றியடையச் செய்துள்ளது.
ஸ்வநிதித் திட்டத்தின் கீழ் பெற்ற கடனைத் தனது கடின உழைப்பின் மூலம் நேர்மையுடன் உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தி, தனது தொழிலை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ள தேசியமணியின் கடிதத்திற்கு பாரதப் பிரதமர் மோடி நேரடியாகப் பாராட்டுக்கடிதம் அனுப்பிக் கவுரவித்திருப்பது, சாமானிய மக்கள் மீது அவர் கொண்டுள்ள எல்லையற்ற அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது.
இவ்வாறு தனது கடின உழைப்பாலும் நேர்மையாலும் முன்னேறியுள்ள தேசியமணிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இந்த அர்ப்பணிப்பும் கடமை உணர்வும் மற்றவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று, வளமான வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.