தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாமக இரண்டாகப் பிரிந்தது.
சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தரப்பு பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமதாஸ் தரப்பு பாமக, சசிகலாவின் புதிய கட்சியான அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
இதில், ராமதாஸ் தரப்பு பாமக சார்பில் 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ராமதாஸ் தரப்புக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். இன்று சேலம் மேற்கு தொகுதியில் வேட்பாளர் அருளை ஆதரித்து பள்ளப்பட்டியில் பிரசாரம் செய்த ராமதாஸ் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.இதையடுத்து அங்கு இருந்த நிர்வாகிகள் ராமதாஸை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.