தமிழக செய்திகள்

சென்னையில் போலீஸ் அதிரடி: 101 போதைப்பொருள் வியாபாரிகள், 133 ரவுடிகள் கைது

கைது செய்யப்பட்ட 133 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், கடந்த 2 நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகளையும், தலைமறைவு ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள 12 போலீஸ் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்கள் தலைமையில் இந்த கைது வேட்டை நடந்தது.

இந்த கைது வேட்டையில், போதைப்பொருள் வியாபாரிகள் 101 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா மற்றும் 1000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் ரவுடிகள் வேட்டையில் 133 பேர் சிக்கினார்கள். அவர்களும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல் தொடர்ந்து கைது வேட்டை நடைபெறும் என்று போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.