ஆறுமுகநேரி,
ஆறுமுகநேரியில் வாகன சோதனையின்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற வாலிபரை லத்தியால் போலீசார் தாக்கினர். இதுதொடர்பாக 2 போலீசார் அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி - அடைக்கலாபுரம் மெயின் ரோட்டில் ஆறுமுகநேரி போலீசார் நேற்று முன்தினம் மாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி மேல தெருவை சேர்ந்த அரசகுமார் மகன் விக்னேஷ் (வயது 25), அவருடைய நண்பர் சூரியா ஆகிய 2 பேரும் திருச்செந்தூர் நோக்கி சென்றனர். அவர்களிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு போலீசார் சைகை காண்பித்தனர். இதனை கவனிக்காமல் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.
உடனே போலீசார் லத்தியால் விக்னேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் விக்னேஷின் முகத்தில் கண் இமையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் ஏற்றி நண்பருடன் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவரது கண் இமையில் 9 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அவரது பார்வைத்திறனும் சற்று பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாகன சோதனையில் நிற்காமல் சென்ற வாலிபரை போலீசார் லத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் ஏட்டு கஜேந்திரன் (43). போலீஸ்காரர் காளி (31) ஆகிய 2 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து சூப்பிரண்டு சிவபிரசாத் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.