நெல்லை,
நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, திருநெல்வேலி மாநகர பகுதிகளில், மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் சோதனை சாவடியில் இருந்து குலவணிகர்புரம் சி.எஸ்.ஐ. சர்ச் வரை, அரசு மருத்துவ கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகரிலிருந்து காவல் நிலையம் வரை மற்றும் மாநகரின் முக்கிய இடங்களில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த கொடி அணி வகுப்பில் நெல்லை சரக போலீஸ் உதவி கமிஷனர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சட்டம் & ஒழுங்கு காவல் துறையினர், ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர்.