சென்னை,
சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில தமிழக காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், சரித்திர பதிவேடு அல்லாத குற்றவாளிகள் என வகைப்படுத்தப்பட்டு, இதில் தலைமறைவாக இருந்து வரும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கோர்ட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்து வரும் நபர்களை பிடிக்க காவல்துறை சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில கடந்த 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை, மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நடவடிக்கையில 245,74 சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அதில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 781 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதில் பிணையில் வெளிவர முடியாத பிரிவாரண்ட்டுகளை நிறைவேற்றக்கூடிய சிறப்பு நடவடிக்கையில், 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை மொத்தம் 1,967 பிணையில் வெளியவர முடியாத பிடிவாரண்ட்டுகள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர்கள், சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு இந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், தொடர்ச்சியாக சோதனைகள் மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தமிழக டி.ஜி.பி. தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தமிழக காவல்துறையினர் தொடர் கண்காணிப்பு பணிகளையும், கைது நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.