தமிழக செய்திகள்

டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

மந்திரி தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சென்னை,

டெல்லியில் மாணவர்கள்-இளைஞர்கள் பேரணி மீது போலீஸ் தடியடி தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது என இடதுசாரி கட்சிகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“இடதுசாரி கட்சிகளின் மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (20.7.2026) சென்னை, அம்பத்தூரில் உள்ள சிபிஐ(எம்.எல்) லிபரேசன் அலுவலகமான தோழர் கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சி.பி.ஐ.(எம்.எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி மற்றும் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், நா.பெரியசாமி, எம்.ரவி, எஸ்.பாலசுந்தரம், அ.சந்திரமோகன், எஸ்.ஜானகிராமன் உள்ளிட்டோர் பங்கெடுத்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

1) டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் பாராளுமன்ற நோக்கிச் சென்ற பேரணி மீது தடியடி தாக்குதல் நடத்திய மோடி அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கின்றோம். நீட் தேர்வு குளறுபடிகள், கல்வித்துறை சீர்கேடுகளுக்கு காரணமான மந்திரி தர்மேந்திர பிரதானை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டுமென இடதுசாரி கட்சிகளின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

2) தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் செப்டம்பரில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும்.

3) நடைபெறும் பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே, நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

4) இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டுப் பிரகடனம் ஆகஸ்ட் 4-ந்தேதி வெளியிடப்படும். தமிழகத்திற்கான சமூக, பொருளாதார, பண்பாட்டு பிரச்சனைகளுக்கான மாற்று அரசியல் திட்டமாக இந்தப் பிரகடனம் அமையும். மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்களை ஆக. 10-க்குள் அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

5) அயோத்தி ராமர் கோவிலில் உண்டியல் வருவாயில் மிகப்பெரும் திருட்டு நடைபெற்றுள்ளது. கோவில் நிர்வாகிகள் உட்பட இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் உறுதியாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெறுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டுமென்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்றும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.