தமிழக செய்திகள்

வீடு புகுந்து புதுமாப்பிள்ளைக்கு சரமாரி வெட்டு: முகமூடி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாலிபரை, மனைவி கண் முன்னரே 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் வீடுபுகுந்து வாலிபரை அவரது மனைவி கண்முன்னே சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட முகமூடிக் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பெரிய தெப்பக்குளம் அருகேயுள்ள வடக்கு ரதவீதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் முத்துக்கணேசன் (வயது 29), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் எட்டயபுரம் நாவலக்கம்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் சோலார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மகேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

வாலிபரை அரிவாளால் வெட்டிய முகமூடி கும்பல்

முத்துக்கணேசன் தினமும் மதியம் உணவருந்த வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மதியம் அவர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மனைவி மகேஸ்வரி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல், கதவு திறந்திருந்த நிலையிலிருந்த வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்தது. கண்இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் உணவருந்திக் கொண்டிருந்த முத்துக்கணேசனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கதறி கூச்சலிட்டார்.

வாலிபருக்கு தீவிர சிகிச்சை

உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துக்கணேசன் உயிருக்குப் போராடினார். அறை முழுவதும் ரத்தம் சிதறிக் கிடந்தது. அப்போது அப்பகுதியில் பாம்பு பிடிப்பதற்காக சென்ற தீயணைப்புத் துறையினர், மகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் விரைந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துக்கணேசனை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உறவினர்கள் திடீர் சாலை மறியல்

இந்த சம்பவத்தை அறிந்து ஆத்திரமடைந்த முத்துக்கணேசனின் உறவினர்கள், கோவில்பட்டி - விளாத்திகுளம் பிரதான சாலையில் மாலை நேரம் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி முழக்கமிட்டதால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முகமூடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் யேசுதாசன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதையேற்று அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்பகையினால் இந்தத் தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி, தப்பிய முகமூடி கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT