தூத்துக்குடி,
தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் மீனாட்சி (45 வயது). இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கிருந்த குப்பை தொட்டிக்குள் ஒரு மணிபர்ஸ் கிடந்துள்ளது. அதை திறந்து பார்த்த மீனாட்சி அதிர்ச்சி அடைந்தார். அதில் தங்க சங்கிலி, கம்மல் உள்ளிட்ட நகைகள் இருந்தன.
இதுகுறித்து மீனாட்சி சுகாதார அதிகாரி முருகனுக்கு தகவல் தெரிவித்தார். அவரது உதவியுடன் தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் நகையை ஒப்படைத்தார். அதில் 35 பவுன் நகைகள் இருந்தன. இதைத் தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சென்னையில் ஒயர்மேனாக வேலை பார்த்து வரும் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகைகள் என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கண்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நேற்று தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்துக்கு வந்த அவர், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து நகைகளை பெற்றுச் சென்றார். 35 பவுன் நகையை பத்திரமாக போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் மீனாட்சியை போலீசார் பாராட்டினர்.