தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் பாலிடெக்னிக் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர், கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பெற்றோருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரிடம் சண்டை

தூத்துக்குடி ராஜகோபால் நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் இசக்கிமகாராஜன் (வயது 17). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு EEE படித்து வந்தார். இசக்கிமகாராஜன் கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாததால் பெற்றோர் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் பெற்றோரிடம் அவர் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று மதியம் பெற்றோர் சொந்த ஊரான தட்டப்பாறைக்குச் சென்ற நிலையில், மாலையில் தனது தாயை தொடர்பு கொண்டு போனில் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, கண்ணாடி, பாத்திரங்களை அடித்து உடைத்துவிட்டு, வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் சீட் மேற்கூரை கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

மாலையில் பெற்றோர் போன் செய்தபோது எடுக்காததால், அவர்களது உறவினர் ரகு நேரில் சென்று பார்த்தபோது இசக்கி மகாராஜன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.