சேலம்,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகளும், பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், எடப்பாடி தொகுதி த.வெ.க. ஆதரவு வேட்பாளர் பிரவீன்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயலை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி தொகுதி சுயேச்சை வேட்பாளரனான எனக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது வன்முறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, த.வெ.க. ஆதரவு வேட்பாளரான எனக்கும், கட்சியினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே எடப்பாடி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அருண்குமாரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பிறகு சுயேச்சை வேட்பாளர் பிரவீன்குமாருக்கு தமிழக வெற்றிக்கழகம் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.