சென்னை,
பெரியார் நகர் துணை அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் நாளை மறுநாள் திறக்கப்படுகிறது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல் முருகன் திறந்து வைப்பார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, வட சென்னையை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு அமைச்சகம் மற்றும் அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள்.
இது சென்னை மண்டலத்தில்14-வது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையமாகும். இதன் மூலம், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குட்பட்ட ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் என்ற இலக்கு நிறைவேறுகிறது.
இந்த தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படுவதால் வட சென்னை மக்களவை தொகுதியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வசிபோர்க்கு பாஸ்போர்ட் மற்றும் தொடர்புடைய சேவைகள் எளிதில் கிடைக்கும். விண்ணப்பதாரர்களின் பயண நேரம் கணிசமாக குறையும்.
தொடக்கத்தில், நாளொன்றுக்கு சுமார் 40 விண்ணப்பங்களை ஏற்கும் இந்த பாஸ்போர்ட் சேவை மையத்தின் செயல்திறன் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நாளொன்றுக்கு 90 விண்ணப்பங்கள் வரை ஏற்கும் நிலை உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.passportindia.gov.in என்ற இணைய தளம், பாஸ்போர்ட் சேவா தெலைபேசி செயலி ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.