தமிழக செய்திகள்

வடசென்னையில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் திறந்து வைத்தார்

புதிய அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தின் மூலம் வடசென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் நகர் துணை அஞ்சல் அலுவலகத்தில் புதிதாக அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய தகவல், ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பாஸ்போர்ட் மையம் மூலம் வடசென்னை மற்றும் சுற்றுவட்டார மக்கள், இனி அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் செல்லாமல், தங்கள் பகுதிக்குள்ளேயே பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை எளிதாக பெற முடியும். இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், அரசின் திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை சென்றடையும் வகையில் அஞ்சலகங்களின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.