சேலம்,
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்தாய்வு கூட்டம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான தபால் வாக்கு சேகரிக்கும் பணி வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு இன்று (சனிக்கிழமை) அம்மாபேட்டை சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் கல்லூரி வரவேற்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டியில் தபால் வாக்குகளை செலுத்துவார்கள்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பட்டியல் பொருத்தும் பணி 29, 30-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்த கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.