தமிழக செய்திகள்

நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

மதுரை,

நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் நடந்த மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், "அ.தி.மு.கவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க, அழிக்க நினைக்கிறான். அ.தி.மு.க.வை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது, தண்ணீராவது, எங்க அண்ணி திரிஷா பற்றி யார் பேசியது? என்று அக்கட்சியினர் கேட்கிறார்கள்" என்றார்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் விஜய், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகு மார் மீது த.வெ.க. நிர்வாகி போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டன போஸ்டர்கள்

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்த ஆர்.பி. உதயகுமாரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து மதுரை முழுவதும் திரிஷா நற்பணி மன்றம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'இருவரின் நட்பை கொச்சைப்படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குரியது. ”யாகாவா ராயினும் நாகாக்க’ வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு.

முன்னாள் அமைச்சரே, மாண்பு தவற வேண்டாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ”எங்கள் அன்பு அக்கா திரிஷாவை பற்றி யார் தவறாக பேசினாலும் எங்களால் ஏற்க முடியாது. மீறினால் மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்ய நேரிடும்” என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.