சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 22 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கொடிகட்டி பறந்து வரும் திரிஷா குறித்து சமீபகாலமாக சர்ச்சைகள் அதிகரித்துள்ளன. திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமின்றி திரையுலக வாழ்க்கை குறித்தும் அவ்வப்போது பரபரப்பு கிளம்பி வருகிறது.
சமீபத்தில் தவெக தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரிஷா வாழ்த்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகை திரிஷா அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது. இதற்கு அவர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் “எந்தவொரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை... என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அக்க திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம். மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம்” என்று அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.