சென்னை,
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். உற்பத்தி செய்யும் நிகழ்நேர தரவுகளை உடனுக்குடன் தமிழ்நாடு மின்வாரியத்துடன் பகிர்வது இனி கட்டாயம். தவறும்பட்சத்தில் மின்உற்பத்தி நிறுவனங்களின் மின் உற்பத்தியில் 10% மின் கணக்கீடு கழித்து கணக்கிடப்படும் - எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தகவல்.
தமிழ்நாட்டில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்த மின் தேவையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூர்த்தி செய்து வருகிறது. இவ்வகை மின் உற்பத்தி இயற்கை சூழலைப் பொறுத்து மாறுபடும் தன்மை கொண்டதால், மாநில மின் கட்டமைப்பை பாதுகாப்பாகவும், சீராகவும், சிக்கனமாகவும் இயக்குவதற்கு நிகழ்நேர தகவல்கள் மிகவும் அவசியமாகின்றன.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள "தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறை – 2026"-இன் படி, அனைத்து காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களும், மாநில மின் சுமை பகிர்மான மையத்துடன் நவீன கணினி அடிப்படையிலான தொலைவழி கண்காணித்து கட்டுப்படுத்துதல் மற்றும் தரவு சேகரிப்பு அமைப்பின் மூலம் நிகழ்நேர தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம், 30.05.2026 அன்று அனைத்து காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியாளர்களுக்கும் வழங்கியுள்ளது.
இந்த நடைமுறையின் மூலம்:
* மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும்.
* மின் உற்பத்தி மற்றும் மின் தேவையை துல்லியமாக திட்டமிட முடியும்.
* நுகர்வோருக்கு இடையூறு இல்லாத, தரமான மின் விநியோகம் வழங்க உதவியாக இருக்கும்.
* புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேலும் திறம்பட ஒருங்கிணைக்க வழிவகுக்கும்.
நிகழ்நேர தரவு தொடர்பு வசதியை ஏற்படுத்தாத மின் உற்பத்தி நிலையங்களுக்கு, தமிழ்நாடு மின்சார கட்டமைப்பு விதிமுறைகளின் படி, மாநில மின் சுமை பகிர்மான மையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
தற்போது காற்றாலை மற்றும் சூரியசக்தி 12,000 த்திற்கு மேற்பட்ட மின் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதில் 10% க்கும் குறைவான மின் உற்பத்தியாளர்களே நிகழ்நேர தரவுகளை மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்துடன் பகிர்ந்து கொள்கின்றனர். சுமார் 90% பசுமை மின் உற்பத்தியாளர்கள் மேற்கண்ட நிகழ்நேர தரவுகளை பல கட்ட அறிவிறுத்தல்கள், நினைவூட்டல் கடிதங்கள் மற்றும் உயர்மட்ட கூட்டங்கள் மூலம் அறிவுறுத்தியும் தற்போது வரை மாநில பகிர்ந்தளிப்பு மையத்திற்கு பகிர்ந்தளிக்கவில்லை.
எனவே வாரிய தரப்பில் இருந்து 30.05.2026 நாளிட்ட 15நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய அறிவிப்பு கடிதம் அனைத்து பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மின் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர்களின் சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கங்கள் மூலமாக தெளிவுப்படுத்தப்பட்டது.
மேலும், மத்திய அரசின் தென்மண்டல மின் ஆற்றல் குழுவின் தொடர் வலியுறுத்தல்கள் மற்றும் மின் கட்டமைப்பு குறியீடுகள் போன்ற சட்டரீதியான மற்றும் தொழில்நுட்பரீதியான காரணங்களினால் மேலும் காலக்கெடுவினை நீட்டிக்க இயலவில்லை. எனவே, அறிவிப்பு பெற்ற 15 நாட்களுக்குள் எஸ்சிஏடிஏ(SCADA) நிகழ்நேர தரவுகளை முழுமையாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் முதற்கட்டமாக 10% மின் உற்பத்தியும், 30 நாட்களுக்கு பிறகு முழு மின் உற்பத்தியும் மின் அனுப்புகை மற்றும் விலகல் கணக்கீட்டு செயல்முறைகளில் இருந்து விலக்கப்படும்.
45 நாட்களுக்கு பின்னரும் தரவுகள் ஒருங்கிணைக்கப்படவில்லையெனில், மத்திய மின்சார ஆணையத்தின் விதிமுறைகளின்படி மாநில மின்பகிர்ந்தளிப்பு மையம் எஸ்எல்டிசி(SLDC) உரிய மேல்நடவடிக்கைகளை மேற்கொண்டு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் தகவல்களை தெரிவிக்கும்.
இதற்கேற்ப, ஜூன் 2026 மாதத்திற்கான மின் ஆற்றல் கணக்கீடு மற்றும் சரிசெய்தல் பணிகள் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தியாளர்களும், நிகழ்நேர தரவு தொடர்பு வசதியை உடனடியாக ஏற்படுத்தி, மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் நம்பகமான மின் விநியோகத்திற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.