தமிழக செய்திகள்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்.. உரிய நேரத்தில் வெளிவருவார்: பழ. நெடுமாறன் பேட்டி

நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜனநாயகன் படம் பற்றி கருத்து கூற முடியாது.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் இன்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வரும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிலேயே மொழிக்காக நிறுவப்பட்ட முதல் பல்கலைக்கழகமான தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பொறுப்பேற்ற முது முனைவர் வ.அய். சுப்ரமணியம் நூற்றாண்டு விழா நடை பெற உள்ளது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

காலை உணவு திட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி எப்படி உள்ளது என்பது குறித்து ஓராண்டுக்கு பிறகு கருத்து கூறுவது தான் சரியாக இருக்கும். முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றியதை வரவேற்கிறோம். நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் ஜனநாயகன் படம் பற்றி கருத்து கூற முடியாது.

பிரபாகரன்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார். இதனை நான் கடந்த 2009-ம் ஆண்டு முதல் கூறி வருகிறேன். உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார். தற்போது வெளியே வருவதற்கான சர்வதேச சூழ்நிலை இல்லை. பிரபாகரன் மகள் ஏற்கனவே தொலைக்காட்சி முன்பு தோன்றி பேசி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.