திருத்தணி ரெயில் நிலையம் எதிரே உள்ள தெருவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ரத்த பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். இதனால், தினந்தோறும் ஏராளமான கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
ஆனால் போதிய டாக்டர்கள் மற்றும் நர்சுகள் இல்லாததால் கர்ப்பிணிகளும், தாய்மார்களும் குழந்தையுடன் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர். மேலும் அடிப்படை வசதியான மின்விசிறி, இருக்கைகள் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இல்லை. இதனால் சிகிச்சைக்கு வருவோர் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி விரைவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.