சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது.
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற கவிமணியின் கூற்றினை மெய்ப்பித்து, பெண்மையை தேசத்தின் பேராற்றலாக உலகிற்கு உணர்த்தியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 12 ஆண்டுகால அவர்தம் பொற்கால ஆட்சியில், 'பெண்கள் தலைமையிலான வளர்ச்சி' என்பது வெறும் முழக்கமாக இல்லாமல், அடித்தட்டு பெண்களின் வாழ்வில் புதிய விடியலையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அடுக்களை புகையிலிருந்து பெண்களைக் காக்க 'உஜ்வாலா' சமையல் எரிவாயுவையும், தூரத்து தண்ணீர் சுமையை குறைக்க 'ஜல் ஜீவன்' திட்டத்தையும் வழங்கி பெண்மையை பாதுகாத்துள்ளார் நமது பிரதமர் அவர்கள். 'ஜன் தன்' கணக்குகள் வழி அவர்களை பொருளாதார சுதந்திரம் பெறச் செய்து, 'லக்பதி திதி'களாக மாற்றி, கிராமப்புற பொருளாதாரத்தின் அச்சாணியாக பெண்மையைப் புது அவதாரம் எடுக்கச் செய்துள்ளார்.
இன்று, வான்வெளி முதல் எல்லையைக் காக்கும் ராணுவப் படைகளின் தலைமைப் பொறுப்புகள் வரை பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நமது பெண் சக்தி சாதனை படைத்து வருகிறது. வளர்ந்த பாரதம் (Viksit Bharat) என்னும் உன்னத இலக்கை நோக்கி நாம் நடைபோடும் இவ்வேளையில், பெண்மையைப் போற்றி வளர்த்த நமது பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் 12 ஆண்டுகால சாதனைகளை நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம்!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.