சென்னை,
மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (Multi Functional Printer) மேயர் பிரியா இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“மேயரின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னை மேல்நிலை, உயர்நிலை மற்றும் மையப்பள்ளி என 100 சென்னை பள்ளிகளுக்கு ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்களை (Multi Functional Printer) வழங்கும் அடையாளமாக 5 பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அச்சுபொறி இயந்திரங்களை மேயர் பிரியா இன்று (09.07.2026) ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் வழங்கினார்.
மேயரின் 2026-27ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 35 மேல்நிலைப்பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள், 15 மண்டலங்களில் உள்ள மையப்பள்ளிகள் மற்றும் உயர்கல்விக்கான சிறப்பு பயிற்சி அளிக்கும் 4 வட்டாரப் பள்ளிகள் என மொத்தம் 100 சென்னை பள்ளிகளுக்கு உயர்தர தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பன்முக செயல்பாட்டு அச்சுப்பொறி இயந்திரங்கள் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் மேயரால் இன்று சென்னை பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், அச்சிடுதல் (Print), நகலெடுத்தல் (Copy), ஸ்கேன் செய்தல் (Scan) உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒரே கருவி மூலம் மேற்கொண்டு நேரம், செலவுகளை மிச்சப்படுத்த, தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி, டிஜிட்டல் கல்வி மற்றும் மின் ஆளுமை (e-Governance) நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, இந்த திட்டத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100 பள்ளிகளில் கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் மேலும் சிறப்பாக தொழில்நுட்ப வசதியுடனும் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுக்கும்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் சமீரன், இணை ஆணையாளர் (கல்வி) கற்பகம், நிலைக்குழுத் தலைவர்கள் பாலவாக்கம் விசுவநாதன் (கல்வி), இளையஅருணா (நகரமைப்பு), சாந்தகுமாரி (பொதுசுகாதாரம்), சர்பஜெயாதாஸ் நரேந்திரன் (வரி விதிப்பு (ம) நிதி), கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.