சென்னையை அடுத்த புழல் சிறை காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பாலு (வயது 24). இவர், 2017-ம் ஆண்டு சிறை காவலராக பணியில் சேர்ந்தார். இவருக்கு திருமணம் ஆகி அஸ்வினி என்ற மனைவியும், 3 மாத கைக்குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி பாலு, தனது வீட்டின் மொட்டை மாடியில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அவர் செல்போனில் பேசியபடி மொட்டை மாடியில் அங்கும் இங்குமாக நடந்தபோது எதிர்பாராதவிதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த பாலு, அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.