வேப்பூர்,
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மருதத்தூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் தனது மனைவி செல்வராணி, மைத்துனர் ஆறுமுகம் ஆகியோருடன் தனது இருசக்கர வாகனத்தில் பூலாம்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
ஏ.அகரம் அருகே சென்றபோது சாலையின் எதிரே வந்த பஸ் மீது கணவன் - மனைவி, மைத்துனர் பயணித்த இருசக்கர வாகனம் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
இதில், படுகாயமடைந்த கருப்புசாமி, மைத்துனர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்வராணி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், படுகாயமடைந்த செல்வராணியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பஸ் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் கணவன் மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.