தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போக்குவரத்து விதிகளை மீறி இயக்கப்பட்ட தனியார் பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, தூத்துக்குடி மாநகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனை முருகன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முடிவைத்தானேந்தல் பகுதியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த தனியார் பேருந்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த பரிசோதனையில் அதிக ஒலி எழுப்பும் 6 ஏர் ஹாரன்கள், 2 ஸ்பீக்கர் பாக்ஸ்கள் பொருத்தியிருந்தது கண்டறியப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறிப் பேருந்துக்கு கலர் பெயிண்ட் அடித்திருந்தது உள்பட பல்வேறு விதிகளை மீறியது உறுதியானது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அந்த பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்தனர். ஒரு பேருந்துக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.