சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் செயல்பட்டு வரும் தனியார் கேண்டீன் மற்றும் டீ கடைகளில் உணவின் தரம் குறித்து புகார்கள் வந்தன. இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமை யில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கேண்டீன் சமையலறை துர்நாற்றத்துடனும், சுகாதாரமின்றியும் இருந்தது. உடைந்த பாத்திரங்களில் உணவு சமைக்கப்பட்டதுடன், சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகளும் அசுத்தமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கேண்டீனின் உணவு உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் உணவு வினியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதேபோல் டீ கடையில் சர்க்கரையில் ஈக்கள், எறும்புகள் மொய்த்திருந்தன. பிரெட், சாண்ட்விச் உள்ளிட்டவற்றில் தயாரிப்பு, காலாவதி தேதிகள் குறிப்பிடப்படவில்லை. குறைந்த தரப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து டீ கடைக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. குறைகளை உடனடியாக சரிசெய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.