தமிழக செய்திகள்

மாடுகளை அழைத்துச் சென்று போராட்டம் - சீமான் மீது வழக்குப்பதிவு

தடையை மீறி சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர்.

தேனி,

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நில உரிமை கோரி தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வன சரகத்திற்கு உட்பட்ட குரங்கணி செல்லும் சாலையில் உள்ள அடவு பாறை பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை வனத்துறையின் தடையை மீறி விவசாயிகள் உடன் மலை மேல் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சீமானை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனை அடுத்து வனத்துறையின் தடையை மீறி தடுப்புகளை தூக்கி எறிந்து சீமான் அவரது ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகள் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் வனத்துறையினரின் தடையை மீறி நாட்டு இன மாடுகளை மலை பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 50 நபர்கள் குறித்து விசாரணை செய்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.

SCROLL FOR NEXT