சென்னை,
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை தலைமைச் செயலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாடகர் அறிவு கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாடகர் அறிவு இன்று சென்னை தலைமைச் செயலகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய அவர், தலைமைச் செயலகத்திற்குள் புகுந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
பின்னர், தலைமைச் செயலகத்திற்குள் அனுமதியின்றி புகுந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக கூறி பாடகர் அறிவுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.