சென்னை,
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) நடைபெற்றது
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் கிலோ ரூ 48 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது ரூபாய் 70 வரை விலை உயர்ந்துள்ளது. எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.சுமார் 25 லட்சம் டன் கரும்பு எத்தனால் உற்பத்திக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம். சர்க்கரை விலை உயர்வால் டீ ,காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர் கடைகளில் கூட, டீ விலை ரூ. 15 வரை உயர்ந்தது. காபி விலை ரூ. 20 வரை உயர்ந்தது. தற்போது மீண்டும் டீ, காபி விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூ. 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூ. 35 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் உளுத்தம் பருப்பு கிலோ ரூ.120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு ரூ.80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ. 250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் தவறிவிட்டன. விலைவாசியை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலை கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (27.08.2026) காலை நடைபெற்றது. தென் சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சிவா தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் மு.வரதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி முன்னிலை வகித்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டன உரையாற்றினார். அரிசி, கரும்பு போன்றவற்றை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்திடக் கூடாது. உணவுப் பொருட்களின் பதுக்கலையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் தடுத்திட வேண்டும். அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலை கடைகள் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கிட வேண்டும். ஏழைகளுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். விலைவாசியை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசுக்குத்தான் கூடுதல் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை உணர்ந்து மத்திய பாஜக அரசு செயல்பட வேண்டும் என்று மு.வீரபாண்டியன் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர்கள் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத், மு .கண்ணகி, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர். சாந்தி, லி.உதயகுமார், இரா.திருமலை, பா.தினேஷ், க.இப்ராஹிம், மற்றும் மாணவர்மன்ற நிர்வாகிகள் மணிகண்டன், சௌமியா உட்பட 150க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.