தமிழக செய்திகள்

10 மணி நேரம் நீடித்த போராட்டம்: மாணவியின் உறவினர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி, வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானார். பெற்றோர் பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு காட்டுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மாணவி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் அலட்சியமாக செயல்பட்டதாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உறவினர்கள் நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவியின் தந்தை மற்றும் குடும்பத்தினரை தனியாக அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டதால் போராட்டம் இரவு வரை நீடித்தது. 10 மணி நேரம் சாலை மறியல் நடைபெற்றநிலையில் அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

முன்னதாக அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. பா.ஜனதா, புதிய தமிழகம், மார்க் சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சியினரும் கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மாணவி கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து போலீஸ் சூப்பிரண்டு மதன் உத்தரவிட்டிருந்தார்.

தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், 10 மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையும் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.