தமிழக செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுக்கூட்டல், மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று முதல் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

“பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசியர்கள் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் (ஸ்கேன் நகல்) பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் இன்று காலை 11 மணி முதல் 27-ந்தேதி மாலை 5 மணி வரை (24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பாடத்துக்கு விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ரூ.275/- ஆகும்.

விடைத்தாள் நகல் பெற்ற தேர்வர்களுக்கு மட்டுமே பின்னர் மறுக்கூட்டல், மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்கான தேதி ஊடகங்கள் வாயிலாகவும், பள்ளிக்கல்வித்துறை இணையதளத்திலும் வெளியிடப்படும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.