சென்னை,
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்படி மாணவர்கள் 93.19 சதவீதமும், மாணவிகள் 97 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக மாணவர்கள் சதம் அடித்த பாடங்களில் கணினி அறிவியல் முதலிடத்தில் உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in இணையதளங்களில் சென்று பார்க்கலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் அறிந்து கொள்ளலாம். இதுதவிர பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 13-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதைபோல தேர்வில் வெற்றி பெறாதவர்களுக்கு ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர். பிஎம்ஸ்ரீ திட்டம் குறித்து மத்திய அரசு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.