சென்னை,
யூடியூப் வீடியோ சேனலில் பிரபலமானவர் மதன் (வயது 29). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தனது யூடியூப் சேனலில் தொடர்ந்து நடத்தி வந்தார். அவர் தனது யூடியூப் சேனலில் பெண்களை பற்றி ஆபாசமாக பேசி கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொட்டியது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை வடபழனியைச் சேர்ந்த அபிஷேக்ரபி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலிடம் புகார் கொடுத்தார்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். மதன் மீது 4 சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய சைபர் கிரைம் தனிப்படை போலீசார், அவரது சொந்த ஊரான சேலம் விரைந்தனர். ஆனால் சேலத்தில் அவர் இல்லை.
அவரது மனைவி மனைவி கிருத்திகா (25) சென்னையை அடுத்த வேங்கைவாசலில் வசித்து வந்தார். அவர் என்ஜினீயரிங் பட்டதாரி. மதனின் யூடியூப் சேனலுக்கு அவரது மனைவி கிருத்திகா தான் நிர்வாகியாக செயல்பட்டுள்ளார். இதனால் அவரை அவரது 8 மாத கைக்குழந்தையுடன் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரை வரும் 30-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மதனை தொடர்ந்து போலீசார் தேடி வந்த நிலையில், அவர் தர்மபுரியில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், நேற்று காலை மதனை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து ஆடி சொகுசு கார், 4 லேப் டாப்கள் மற்றும் டிரோன் கேமரா ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மதனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை போலீசார் ஆஜர்படுத்தினர். மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியது மதன் தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதன் தற்போது பூந்தமல்லி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.