விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 436 பேர் மனுக்களை கொடுத்தனர். இம்மனுக்களை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இம்மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, முதல்-அமைச்சரின் சூரியஒளி எரிசக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் வானூர் ஊராட்சியில் குடியிருக்கும் பயனாளிகளான ஒட்டை கிராமத்தை சேர்ந்த இளம்பாரதி, வானூரை சேர்ந்த அருள்ஜோதி ஆகியோருக்கு கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணையை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ராவிஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) சரஸ்வதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவா, மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.