கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் - டாக்டர் ராமதாஸ் அறிக்கை

கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு பொது மக்களின் அலட்சியமே காரணம் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பொது மக்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் காட்டிய அலட்சியமும், அத்துமீறல்களும் தான் காரணம்.

மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் என பல இடங்களில் மக்கள் கூடியதன் விளைவாகவே கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் செய்திருக்கும் எச்சரிக்கை உண்மையானதுதான். பொதுமக்கள் விழிப்புடனும், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றியும் நடக்காவிட்டால் தமிழ்நாட்டில் மூன்றாவது அலையை தடுக்க முடியாது.

கொரோனா முதல் அலையிலும், இரண்டாவது அலையிலும் நாம் இழந்தவை ஏராளம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் உயிர் நண்பர்கள், நெருங்கிய உறவுகளில் குறைந்தது ஒருவரையாவது கொரோனாவுக்கு பலி கொடுத்திருக்கிறோம். அரசுக்கும், தனிநபர்களுக்கும் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் மதிப்பிட முடியாதவை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகளுக்குச் செல்லாமல் குழந்தைகள் மன அளவில் அனுபவித்து வரும் கொடுமைகள் வர்ணிக்க முடியாதவை. மூன்றாவது அலையின் பாதிப்புகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கப்படும் நிலையில், நாமே அதற்கு அழைப்பு விடுக்கக் கூடாது.

கொரோனா மூன்றாவது அலையைத் தடுப்பது அரசின் கைகளிலும், பொதுமக்களின் கைகளிலும்தான் உள்ளது. எனவே, பொதுமக்கள் இனியாவது தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும். விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மீண்டும் ஓர் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்று அதில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து