தமிழக செய்திகள்

வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வங்கி ஊழியர்கள் கையாடல் செய்த பணத்தை விரைந்து பெற்றுத்தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

விழுப்புரம் அருகே உள்ள தென்பேர் கிராமத்தை சேர்ந்த வள்ளி, வீரம்மாள், தண்டபாணி உள்ளிட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் சின்னதச்சூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளோம். எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் அந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இந்த சூழலில் எங்களுடைய கோடிக்கணக்கான பணத்தை வங்கி ஊழியர்கள் கையாடல் செய்து ஏமாற்றி விட்டனர். எங்களுடைய பணத்தை பெற்றுத்தரக்கோரி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் ஏற்கனவே மனு கொடுத்தும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்களுடைய பணத்தை பெற்றுத்தரவில்லையெனில் நாங்கள் குடும்பத்தோடு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எனவே எங்களுடைய பணத்தை பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

SCROLL FOR NEXT