தமிழக செய்திகள்

குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விதிமீறி கட்டிடம் கட்டுவதை தடுக்க கோரி குன்னூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால், கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. குன்னூர் நகராட்சி பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ளதால், 2 அடுக்குகளுக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, பாறைகளை உடைக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்து உள்ளது. இருப்பினும், விதிமீறி கட்டிடங்கள் கட்டுவது தொடர் கதையாக உள்ளது. விதிமீறி 1,800-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே குன்னூர் நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் விதிமீறி கட்டிடம் கட்டி வருவதாக புகார் எழுந்தது. இந்தநிலையில் விதிமீறி கட்டிடம் கட்டுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பொதுமக்கள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 

SCROLL FOR NEXT