சென்னை,
அ.தி.மு.க. தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். அதில் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தவறான செய்தியை பரப்புவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி குறித்து பதிவேற்றம் செய்தது இன்றுவரை இணையதளத்தில் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி அனுப்பிய புதிய நிர்வாகிகள் பட்டியல் நிபந்தனையுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
வழக்குகளின் தீர்ப்பின் அடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது என்றும், வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தன்னிச்சையாக ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக தவறான தகவலை எடப்பாடி பழனிசாமி பரப்பி வருவதாகவும் தெரிவித்துள்ள புகழேந்தி, அ.தி.மு.க. தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மிக நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.