தமிழக செய்திகள்

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தைத்திருவிழா சப்பர பவனி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பெருவிழாவில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் வெகு விமரிசையாக நடந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தைத்திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று காலையில் திருத்தல பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமையில் வெகு விமரிசையாக நடந்தது. இதில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி, விருதுநகர், மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் புனித அந்தோணியார் திருவுருவம் தாங்கிய சப்பர பவனி ஆலயம் முன்பிருந்து தொடங்கியது. புளியம்பட்டியில் முக்கிய வீதிகள் வழியாக சப்பரம் சென்றது. வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து நேர்த்தி கடனாக உப்பை தூவியும், கும்பிடு சரணம் போட்டும் வழிபாடு நடத்தினர். மேலும், பலர் நேர்த்திக்கடனாக குழந்தைகளை விற்று வாங்கினர். இவ்விழாவில் 100-க்கும் மேற்பட்ட பங்கு தந்தையர்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மேலும், கத்தோலிக திருத்தலமாக இருந்தபோதிலும், மதவேறுபாடுகளின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இந்த விழாவிற்கான சிறப்பு பேருந்துகளுக்கான ஏற்பாடுகள் தூத்துக்குடி, நெல்லை, கோவில்பட்டி ஆகிய நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மோட்சராஜன், உதவி பங்கு தந்தை மிக்கேல்சாமி, ஆன்மிகத்தந்தை சகாயதாசன், பீட்டர் பிச்சைக்கண் மற்றும் அருள்சகோதரிகள், ஆலய இறைமக்கள் செய்திருந்தனர்.